Saturday 26 November 2011

என் நாட்குறிப்பின் ஒரு பக்கம்

            இது எனது முதல் முயற்சி.   என் அனுபவங்களையே எழுதிவந்த நான் முதல் முறையாக ஒரு கற்பனை கதை எழுதியிருக்கிறேன்.  விமர்சனங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

            எனது பெயர் சம்சங்கிகோ என்சாம் எக்கோ 32 ....   என்சாம் எக்கோ 32  என்ற எந்திரக்கடவுளை வேண்டியதால் நான் பிறந்தேனாம் அதனால் அவர்பெயரே எனக்கு வைத்துவிட்டார்கள்.   சரி... எனது orange mPad இன் படி நான் இப்பொழுது செய்ய வேண்டியது இன்று நடந்தவைகளை தொகுத்து அனுப்ப வேண்டும்... அதாவது ரிப்போர்ட் ரெடி பண்ணனும்...

            25 / 11 / 2524 காலை 2 மணிக்கு தொடங்கியது இந்நாள், வழக்கம் போல வெயில் 58  டிகிரி.  எனது ரோபோ வழங்கிய தேனீர் கலவையையும், கார்போஹைட்ரெட் மாத்திரை 1 , வைட்டமின் 2 , புரோட்டின் 2  சாப்பிட்டுவிட்டு 204 வது மாடியில் உள்ள எனது அறையிலிருந்து கிளம்பி sky scooter மூலம் என் அலுவலகத்திற்கு கிளம்பினேன்.   சரியாக அலுவலகம் புறப்படும் பொழுது பக்கத்துக்கு அறை நண்பர் என் mPad கு அழைத்தார்.  அவர் ரோபோ மனைவிக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனையாம், நல்லவேள என் மனைவி ரோபோ இல்ல... ம்ம்ம் ..  அவருக்கு ஆறுதல் சொல்லபோக அலுவலகத்திற்கு தாமதம் ஆகியது.     போகும் வழியில் ஸ்கூட்டர்கு  செமிச்டோல் போட்டேன்.

                அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் என் ரோபோ மேனேஜர் கத்தியது.  மேனேஜர் மனுஷனா இருந்தாலும் ரோபோவாக இருந்தாலும் கத்தத்தான் செய்வாங்க போல...   காலை 7 மணிக்கு அலுவலக இடைவேளையில் கார்பரேஷன் ஆபிசுக்கு வீட்டுல சொட்டுநீர் குழாய்ல தண்ணீர் வராததைப்பற்றி கம்ப்ளைன்ட் பண்னச்சென்றேன்.   அரசாங்க அலுவலகத்தில் வேலைசெய்யும்  எந்த ரோபோகும் சம்பளம் கொடுக்கல போல அவ்ளோ மெதுவா வேலை செய்யுது.  மனுஷன் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ரோபோ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்க அலுவலகம் என்னமோ மாறுவது இல்லை.    வரும் வழியில்  நண்பர் சந்கிச்கியை சந்தித்தேன் அவருக்கு திருமணம் என டிஜிட்டல் அழைப்பிதழை தந்து சென்றார்.

             மதிய உணவு எடுத்துசெல்ல மறந்துவிட்டதால் உணவு விடுதிக்கு சென்று 3 கார்போஹைட்ரெட் , 4 வைட்டமின் , 1 கொழுப்பு மாத்திரையும் 20 ml தண்ணிரையும் வாங்கிக்கொண்டேன். தண்ணீருக்கான மாத்திரையையும் கண்டுபிடிக்கபோவதாக அறிக்கை கொடுத்திருக்காங்க.... கண்டுபிடிச்சா நல்ல இருக்கும் விலைவாசி தாங்க முடியல.  3 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு போகும் வழியில் ஷாப்பிங் சென்றேன்.  நேனோ எரோ ட்டிக் பைபரில் செய்த டிரஸ் வாங்கினேன்.  அடிக்கிற வெயிலுக்கு இது குளுமை தரும் என விளம்பரத்தில் பார்த்தேன்

            மாலை 5 மணிக்கு நண்பர்களுடன் 450 வது  மாடியில் சிறிய சந்திப்பு.   7 மணிக்கு இரவு உணவு.  8 மணிமுதல் 12 மணிவரைக்கும் வால் ஸ்க்ரீன் டிவி ப்ரொஜெக்டரில் புதிதாக வெளிவந்த படங்களை பார்த்தேன்.  புதிதாக இன்டர்நெட்டில் அறிமுகபடுத்தியிருக்கும்  moongil- இல் புதிதாக வந்த அனைத்து நாட்டு படங்களையும் அடுத்த நாளே பார்க்கலாம்.    மணி 12 கு தூக்க மாத்திரை ஒன்றை விழுங்குவதன்மூலம் இந்நாள் இனிதே நிறைவடைகிறது.


பிகு 
என் பெயர் சம்சங்கிகோ கு விளக்கம் சொல்லலியே அது சன்முககுமார் என்ற என் 4 தலைமுறைக்கு முந்தய தாத்தாவின் பெயர் மருவு .
             

Thursday 10 November 2011

வேலாயுதம்

                         வேலாயுதம் இளையதளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான படம்.  படம் வெளியாகி ரசிகர்கள் சண்டை போட்டுமுடித்த இந்த நேரத்தில் என்ன விமர்சனம் எழுதவேண்டிகிடக்கு என நீங்கள் யோசிக்கலாம்.  என்ன செய்ய நான் படம் பார்த்தது நேற்று தானே.  படம் பார்த்து முடித்தவுடனேயே முடிவு செய்துவிட்டேன் பதிவு கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என்று.   இந்த பதிவில் நான் எழுதபோவது அனைத்தும் எனது கருத்துக்கலேயன்றி யாரையும் புகழவேண்டும் என்றோ அல்லது இகழ வேண்டும் என்றோ எழுதுவது அல்ல.

                        விஜய் படம் என தெரிந்ததுமே கதையும் தெரிஞ்சாச்சி.. டிரைலர் பாத்ததும் படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது.  இருந்தாலும் விஜய் படம்னா பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அதனால் படம் பாக்கலாம்.   சரி இனி வேலாயுததைப்பற்றி  பார்ப்போம்....   முதல் காட்சியிலேயே ஏதோ முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ் நாட்டு அரசியல்வாதியை கடத்தி தமிழ் நாட்டின் அமைதியை குலைக்க ஏற்பாடு செய்கிறர்கள்.  ஒருவேள தெரியாம விஜயகாந்த் படத்துக்கு வந்துட்டோமானு யோசிச்சிட்டே படத்த பார்க்க துவங்கினேன்.  அடுத்த காட்சில விஜய் அரிவாள் எடுத்துட்டு ஓடிவரார்...  அபாடா விஜய் படம் தான்.... இப்ப ஏதோ சண்டை வரும்னு பாத்தா தங்கச்சிக்கு ட்ரைன்ல இடம் புடிக்கிக்ராறு.. அப்டியே இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இடையிலான பாசத்த flashbackலையே  புரியவைக்கிறாங்க...



                        விஜய் தற்செயலாக செய்யும் செயல்கள் எல்லாம் ஜெனிலியா உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் செய்வதாக மக்கள் நம்ப விஜய்க்கே தெரியாமல் விஜய் மக்களின் கடவுளாகிறார்.  விஜய்க்கு உண்மை தெரிய வரும்பொழுது எனக்கு எதற்கு வம்பு என ஒதுங்க அவருக்கே வருகிறது பிரச்சனை... தன்னை ஏமாற்றிய சீட்டு கம்பெனிக்காரனை துவைப்பதில் துவங்குகிறது சூப்பர் ஹீரோ பயணம்.   அனைத்து கெட்டவர்களையும் துவைத்து, தங்கையை இழந்து, மக்களுக்கு அறிவுரைகூறி இனிதே முடிகிறான் வேலாயுதம்.  இது கதை சுருக்கம்.  

                        விஜய் படம் அதனால் அவர் மட்டுமே படம் முழுக்க வருகிறார், மற்ற எல்லோரும் வந்து தலைகாட்டிவிட்டு செல்கிறார்கள்.    முதலில் ஜெனிலியா எல்லா படத்திலும் லூசு பெண்ணாக வருபவர் இதில் கொஞ்சம் நடித்துள்ளார்.   ஜெனிலியா வழக்கமாக செய்யும் வேலையே  இதில்  ஹன்சிகா வேலை.   விஜயை சுத்தி சுத்தி வருகிறார் அவ்வளவு தான்.  படத்திற்கு இருக்கும் ஒரே ஒரு பிளஸ் சந்தானம்.   எல்லா படத்தலையும் வில்லன்கள் பக்கம் பக்கமா வசனம் பேசுவாங்க இதில்  அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.  ராகவ் கொடுத்த சம்பளத்திற்கு வேலைசெய்திருக்கிறார் பிரச்சனை நடக்கும் இடத்திற்கெல்லாம் வேலாயுதம் வர்றாரோ இல்லையோ இவர் கரெக்டா வந்து வேலாயுதம் புகழ்பாடிட்டு போறாரு.

                   சரண்யா மோகன் அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி... ஊர் மக்களை காப்பாத்த தன் உயிரை தியாகம் செய்கிறார்.  இது தவிர ஊர் மக்கள், போலீஸ், சில வில்லன்கள்  இப்டி பலர் இருந்தாலும் எல்லாரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவதால் அவர்களை பற்றி பேச எதுவும் இல்லை.    பொதுவாக இது போன்ற படங்களில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை ஹீரோ சமாளிப்பார்.  இதில் பல பிரச்சனை அதனாலோ எனவோ எந்த மக்கள் பிரச்சனையும் மனதை தொடும் வகையில் படமாக்கப்படவில்லை.  இது தவிர படம் முழுக்க அரசியல் பொடி தூவியிருக்கிறார் ராஜா.  பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது.  விஜயை சூப்பர் ஹீரோவாக காட்டுவதிலேயே முனைப்பாக இருந்ததாலோ எனவோ எந்த உறவும் ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை.   வழக்கமாக நடனத்தில் தன் தனித்துவத்தை காண்பிக்கும் விஜய் கடந்த சில படங்களாக ஏதோ ஆடிவிட்டு போகிறார்.  சிம்ரனுக்கு பிறகு நடனம் ஆடத்தெரிந்த ஒரு கதாநாயகி விஜய்க்கு ஜோடியாக்கப்படவில்லை என்பது எனது கருத்து.  

                        இது போன்ற படத்தை எடுக்க பேரரசு போதுமே ராஜா எதற்கு??   அரசியல் நெடி இல்லாமல் சாதாரணமாக எடுத்திருந்தால் திருப்பாச்சி மாதிரி ஒருவேளை பெரிய வெற்றி அடைந்திருக்கலாம்.    விஜயிடமிருந்து வித்தியாசமான நடிப்பு அல்ல வித்தியாசமான கதைகளம் அமைந்த படங்களையாவது எதிர்பார்க்கிறோம்.   வில்லு படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருப்பது உண்மை.  இதை உணர்ந்து இனிவரும் படங்களையாவது வித்யாசமாக தேர்ந்தெடுப்பர் என நம்புவோம்.

Saturday 22 October 2011

தீபாவளி

              தீபாவளி அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த பண்டிகை.  மதசார்பு இல்லாமல் அணைத்து குழந்தைகளும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழப்படுவது.  எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தனிப்பட்டமுறையில் தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை.   இன்னும் இரண்டொரு நாளில் தீபாவளி வரும் இந்த சமயத்தில் நான் கொண்டாடிய தீபாவளி பற்றி கூற விழைகிறேன்.

             வீட்டில் நான் ஒரே பிள்ளை, பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் அம்மா என்னை விளையாட அனுமதிப்பதும் இல்லை, ஆனால் தீபாவளி அன்று வெளியில் வந்து தானே பட்டாசு வெடிக்க முடியும்.  பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் தீபாவளி அன்று அம்மாவின் கண்காணிப்பில் விளையாட அனுமதி கிடைக்கும் என்பதும் தீபாவளி எனக்கு பிடிக்க ஒரு காரணம்.  ஒவ்வொரு வருட துவக்கத்திலும் புது நாள்காட்டி கிடைத்ததும் நான் செய்யும் முதல் வேலை தீபாவளி எப்பொழுது என தேடுவதுதான் அவ்வளவு  விருப்பம்.  தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அம்மாவிடம் புது துணி எடுக்க விண்ணப்பம் போட்டுவிடுவேன்.  தினமும் ஒரு முறையேனும் அதை நியாபகபடுத்தவில்லை என்றால் தூக்கம் வராது.  தீபாவளியும் எனது பிறந்தநாளும் இருவார இடைவெளியில் வரும் என்பதால் அம்மா இரண்டு புதுத்துணி வாங்கித்தருவார்கள்.


            அடுத்த குறிக்கோள் பட்டாசு அது அப்பா மனது வைத்தால் தான் முடியும்.  அப்பா எளிதில் வாங்கித்தரமாட்டார்.  அப்படியே வாங்கித்தந்தாலும் மத்தாப்பு வகைகளே வாங்கித்தருவார்.  எனக்கோ பெரிய வேடிவகைகளை வெடிக்க ஆசை.  பக்கத்து வீட்டு அண்ணா ஊதுவர்த்தியை ஊதி ஊதி பட்டாசு பற்ற வைப்பதை பார்த்து அதைப்போல் எனக்கும் வைக்க ஆசை.   எவ்வளவு கெஞ்சினாலும் வெடி கிடைக்காது.  கொஞ்சம் வளர்ந்த பிறகு தீபாவளி அன்று மனமிரங்கி பிஜிலி வெடி வாங்கித்தருவார்.  பக்கத்து வீட்டு அண்ணாவைப்போல் ஊதுவர்த்தியை ஊதிஊதி வெடிப்பேன்.  அதில் கொஞ்சம் பட்டாசை சேமித்து வைத்துக்கொள்வேன் கார்த்திகை தீபத்திற்கு. 

           அடுத்து தீபாவளி பலகாரம் அது நான் கேட்காமலே கிடைக்கும்.   தொலைக்காட்சயில் முந்தினநாள் போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே நானும் அம்மாவும் செய்வோம்.  தீபாவளியில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கோவிலுக்கு போகவேண்டும் என்று காலைலேயே எழுப்பமாட்டார்கள்.  அன்று முழுக்க அசைவ சாப்பாடு தான்.  காலையில் இட்லி, மட்டன் , மதியம் பிரியாணி, இரவு சோறு, கோழிக்குழம்பு.  இது தவிர பாயாசமும் உண்டு.  பட்டாசு வெடிப்பதும், சாப்பிடுவதும், தொலைகாட்சி நிகழ்ச்சி பார்ப்பது தான் அன்றைய முக்கிய வேலை.  மாலை அத்தை வீட்டிற்கு சென்று அங்குஉள்ள பட்டாசையும் வெடிப்பேன்.  அடுத்து பள்ளிக்கு தீபாவளி துணியை போட்டு சென்று பட்டாசு வெடித்ததில் துணிக்கு ஏற்பட்ட காயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் முடியும் எனது தீபாவளி.

           இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் புதுத்துணி நான் எடுத்துக்கொடுக்கிறேன்.  பலகாரம் கடையில் வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  தொலைகாட்சி சிறப்பு காட்சிகள் தொல்லை தருவதாகவே இருக்கிறது.  பட்டாசு கேட்டால் அப்பாவும் அம்மாவும் முறைக்கிறார்கள்.  எப்படி தான் மாறினாலும் தீபாவளி தீபாவளி தான்.  அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.  

Saturday 27 August 2011

கிராமத்து வாழ்க்கை

                     
                      இன்று அதிகமாக மக்கள் நகரத்தில் வாழ்கிறார்கள், அதில் பலரின் உறவினர்கள் கிராமத்தில் வாழ்பவர்களாக இருக்கவாய்ப்பு உண்டு.   அவர்கள் தனது சிறு வயதில் பள்ளிவிடுமுறை நாட்களில் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.   அன்றைய நாட்களின் நினைவுகள் இன்றும் அவர்களுக்கு இருக்கும்.   தனது வாழ்கையில் சிறந்த நாட்களாக தனது பிள்ளைகளிடம் கூறி இன்றைய நகரத்து வாழ்கையை அங்கலாய்ப்பவர்கள் பலர்.  

                       நானும் எனது சிறுவயதில் விடுமுறைக்கு என் அத்தை வீட்டிற்க்கு செல்வதுண்டு.   வீட்டில் ஒரே பிள்ளையாக வளரும் எனக்கு அத்தை வீடு ஒரு சொர்க்கம் போல தோன்றும்.  இங்கு கான்க்ரீட் வீடுகளின் வெப்பத்தில் வாழ்ந்து விட்டு அத்தையின் ஓட்டு வீடு குளுமையாக இருக்கும்.  தொலைகாட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனம் ஏதும் இல்லாததால் மதியவேளைகளில் ஊர்சுற்ற போவது வழக்கம்.   அத்தை பிள்ளைகள், அவர்களின் பக்கத்துக்கு வீடு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வயல், தென்னந்தோப்பு, குளம், ஆறு போன்றவற்றிக்கு செல்வோம்.  மதிய வெயிலில் ஆறில் குளிப்பது அவ்வளவு சுகமாக இருக்கும்.   அப்படியே கிளம்பி வயல்வெளிகளை கடந்து தென்னந்தோப்பிற்கு செல்வோம்.  வழியில் வயலுக்கு தண்ணீர்பாய்ச்ச வாய்க்கால் இருக்கும், அதில் இறங்கி தண்ணீரில் விளையாடிக்கொண்டே செல்வோம்.   வாய்க்கால் ஓரத்தில் வளர்ந்திருக்கும் ஒரு செடியின் காம்பை எங்களை கூட்டிச்செல்லும் அண்ணா வெட்டிவைத்துக்கொள்வார்கள்.


                       தோப்பு வந்ததும் இளநீர் பறித்து வெட்டிவந்த காம்பை வைத்து உறுஞ்சி குடிப்போம்.  காம்பையே உறிஞ்சிகுழலாக மாற்றிய அண்ணாவின் அறிவு வியப்பாக இருக்கும்.  மாலை வீடு திரும்பியதும் பல்லாங்குழி, பாண்டி, தென்னைமட்டை கிரிக்கெட், ஏழாங்கல் விளையாட்டு போன்றவை விளையாடுவோம்   கோடை விடுமுறை நாட்களில் தான் ஊர் காவல் தெய்வங்களின் திருவிழாக்கள் வரும்.  திருவிழா நாட்களில் நாள் முழுக்க கோவிலிலேயே இருப்போம்.  10  நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினம் பூஜைகள் நடப்பது போக இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.  அதை பார்க்க 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4 மணிக்கே செல்வோம்.   அக்கா, அத்தை, சித்தி என எல்லோர்க்கும் இடம் பிடித்துகொடுப்போம்.  நிகழ்ச்சி பாத்துக்கொண்டே அங்கேயே தூங்கிவிடுவோம்.  காலையில் விழித்தால் வீட்டில் இருப்போம்.



                       கடைசி 3 நாட்கள் திருவிழா விஷேசமானது.  சாமியாட்டம், வில்லுபாட்டு, கணியான் போன்ற கிராமிய நிகழ்சிகள் நடைபெறும்.  வில்லு பாட்டு கதை கேட்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  சுடலைமாடன் கதை, நல்லதங்காள் கதை போன்றவற்றை பாட்டுடன் சேர்ந்து கேட்கும் பொது நாம் நம்மையே மறந்து கதையில் ஒன்றிவிடுவோம்.  கணியான் ஆடுபவர்கள் பெண்வேடமிட்டு ஆடுவார்கள்.  அவர்கள் ஆணா, பெண்ணா என சந்தேகத்துடனேயே அவர்களின் அலங்காரத்தை பார்த்துக்கொண்டிருப்போம்.

                      மாமா வாங்கி கொடுத்த புது துணியை போட்டுக்கொண்டு சாமியாட்டம் பார்க்க போவோம்.  கையில் தீ பந்தம் வைத்துக்கொண்டு ஆடும் சாமியாடியை பார்க்க மிரட்ச்சியாக இருக்கும்.  உண்மையிலேயே சாமி வந்து ஆடுவதை பார்ப்பது போல் பயபக்தியாக பார்ப்போம்.  கொதிக்கும் மஞ்சள் தண்ணீரில் தென்னம் பூவை நனைத்து தன் முதுகில் அடித்துக்கொண்டு சாமி ஆடும்போது சிலதுளிகள் நம் மீது பட்டு விடும் சூடு தாங்கமுடியாமல் கத்திவிட்டு வீட்டிற்கு வந்ததும் அத்தையிடம் இதை சொன்னதும் அவள் " அதுதான் டா சாமி சக்தி, சாமியாடிக்கு எதுமே பன்னால பாத்தியா?  ஆடுனது அவன் இல்லடா, அவனுக்குள்ள இருந்த ஆத்தா" என்பாள் பயத்துடன் கேட்டுவிட்டு அடுத்த நாள் கடையில் டீ குடிக்கும் சாமியாடியயே பார்த்துக்கொண்டிருப்போம்.  அவரே கடவுள் போல தோன்றும்.  விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் பொது ஒரு வாரத்திற்கு இந்த கதை தான் நண்பர்களிடம் சொல்ல.

                       கொஞ்சம் வளர்ந்த பிறகு விடுமுறைக்கு அத்தை வீட்டிருக்கு செல்ல அனுமதி கிடைப்பதில்லை.   அண்மையில் அத்தை ஊருக்கு சென்றிருந்தேன் .  பழைய நிகழ்வுகளை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பல வயல்கள், தோப்புகள் வீடுகளாக மாற்றப்பட்டு இருந்தன.  தெருவில் எந்த சிறுவர்களையும் பார்க்க முடியவில்லை.  கோவிலில் திருவிழா என அத்தை கூறிய பிறகே தெரிந்தது.  கோவில் வில்லுபாட்டு சத்தத்திற்கு பதிலாக வீடுகளில் ஓடும் தொலைக்காட்சியின் சத்தமே கேட்டது.  கடைசி நாள் மட்டும் தான் கோவிலில் கூட்டம் வருமாம், அதனால் அன்று மட்டுமே நிகழ்சிகள் நடைபெறுமாம்.

                         கிராமங்கள் மாறிக்கொண்டு வருவதைப்பற்றி பல கட்டுரைகள் படித்த போது பெரிதாக எதுவும் தோன்றாத எனக்கு அன்று அத்தை வீட்டிலிருந்து திரும்பும்போது மனம் கனமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் எந்த சிறுவர்களும் விடுமுறைக்கு அத்தை, சித்தி வீட்டிற்கு செல்வதில்லை விடுமுறையில் கூட பல வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள் நம் பெற்றோர்.  நமது முன்னோர் பார்த்து ரசித்த பல விஷயங்களை நாம் பார்க்கவில்லை,  நாம் ரசித்த சில விஷயங்களை கூட அடுத்த தலைமுறை பார்க்க போவதில்லை.  இப்படியே போனால் வருங்காலத்தலைமுறை இயந்திரங்களையும், கட்டிடங்களையும் மட்டுமே ரசிக்கவேண்டி வரும்.

                          இன்றைய குழந்தைகளிடமும் இயற்கையை ரசிக்க வேண்டும், கிராமிய கலைகளை அறியவேண்டும் என்ற ஆர்வம் இல்லை.  இதை பற்றி எடுத்து சொல்லவும் நமக்கு நேரமில்லை.   நாகரிகத்தில் முன்னேருவதாக எண்ணிக்கொண்டு நாம் நமது இயற்கையை இழந்துகொண்டிருக்கின்றோம்.  வருத்தப்படவேண்டிய விஷயம்........ :(

Sunday 14 August 2011

மறக்க முடியாத நாள்

             எல்லாருடைய வாழ்க்கைலயும் மறக்கமுடியாத நாட்கள் இருக்கும் அதில் சில மகிழ்ச்சியானதாகவும், சில  சோகமானதாகவும்  இருக்கும்.  ஆனால் ஒருசில  நாட்கள் சிரிப்பானதாக இருக்கும், அப்படிப்பட்ட ஒரு நாளைப்பற்றி உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.
            இது நிகழ்ந்தது 2006இல் , அப்பொழுது நான் ஹிந்தி பிரவின் பரிட்சை எழுத முடிவுசெய்தேன் ( எனது அம்மா "உன்னவிட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஹிந்தி பரிட்சை முடிச்சிட்டாங்க நீ மட்டும் எதையும் ஒழுங்கா செய்யாத" என திட்டியதன் விளைவு இந்த அவசர முடிவு).  அதனால் புத்தகத்தை தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ( அம்மா நம்பனும்ல).  படிப்பது எப்படி? நல்ல பிள்ளையா தினமும் அத்தை வீட்டிற்கு சென்று படிப்பது என முடிவானது.  அதன்படி தினமும் அத்தை வீட்டிற்கு சென்றேன் (போற வழில தான் என் நண்பர் வீடு உள்ளது இப்ப புரிஞ்சிருக்குமே நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக முடிவெடுதேனு).
             இப்படியே இரண்டு மாதங்கள் சென்றதில் பரிட்சை தேதி வந்தது. இது போன்ற அரசாங்க தேர்வுகள் எல்லாம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெறுவது வழக்கம்.  பிரவீன் தேர்வில் மொத்தமாக 3 எழுத்து தேர்வு மற்றும் 1 நேர்முக தேர்வு 2 நாட்களாக நடைபெறும்.   முதல்நாள் 2 தேர்வும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்.  3 வது தேர்வு இலக்கணம் (தமிழ் இலக்கணமே நமக்கு அரகொற இதுல ஹிந்தி இலக்கணமா? )
  எஸ்.எல்.பி பள்ளி
           தேர்வு அறைக்குள் சரியான நேரத்தில் சென்றுவிட்டேன்.  பக்கத்தில் ப்ராதமிக் தேர்வு எழுதும் ஒரு சிறுவன் ( அப்படா நாம எழுதுறத பாத்தாலும்  இவனுக்கு புரியாதுநு ஒரு சந்தோசம்) இருந்தான்.  விடைத்தாள், வினாத்தாள் எல்லாம் வழங்கப்பட்டது.  வினாத்தாள் பார்த்ததும் ஒரு சந்தேகம் இது நமக்கானதுதானா? ( அப்புறம் என்னங்க நா படிச்சது எதுமே வரல).   தேர்வின் பெயர் எல்லாம் சரியாக இருந்ததால் இது பிரவீன் வினாத்தாள் தான் என நம்பி எழுத ஆரம்பித்தேன் (வேற வழி).  சரியாக ஒரு மணிநேரம் எழுதினேன்  ( மொத்தம் 3 மணிநேரம் ).  பக்கத்தில் இருந்த சிறுவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் (ஆஹா! கண்டுபிடிச்சிட்டானோ!!!).  சரியாக கவனித்த பிறகு தெரிந்தது அவனுக்கும் எதுவும் தெரியவில்லை (அப்படா!!!).  சரி, அவனுக்காவது உதவி செய்யலாம் என நினைத்து அனைத்து விடைகளையும் சொல்லிக்கொடுத்தேன் ( சரியாதாங்க..... நம்புங்க).
           3 மணிநேரம் முடிந்தது " அக்கா, நன்றி" என தம்பி விடைபெற்றான்.   வெளியில் வந்து அடுத்த நேர்முக தேர்வுக்காக தயாராக நினைத்தேன் (அதாச்சும் ஒழுங்கா பண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம்.  நேர்முக தேர்வு அறையின் முன் பலர் காத்திருந்தார்கள்.  அவர்களிடம் நானே அறிமுகமாகி காலையில் நடந்த தேர்வு பற்றி விசாரித்தேன்.  அனைவரும் வினாத்தாள் மிக கடினம் என கூறினார்கள் ( ஒரு சந்தோசம்).   அத்தோடு நான் நிறுத்தியிருக்கலாம், வினாத்தாளை எடுத்து அவர்களிடம் "question எல்லாம் out of syllabus பாத்திங்களா?" என்றேன், அதன்பிறகு தான் தெரிந்தது syllabus மாறிவிட்டதாம் ( அவமானம்....).   இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்தேன்.  அதன் பிறகு தனியாக அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன் ( வேற என்னங்க பண்ண புக் தான் மாறிபோச்சே படிக்கவா முடியும் புரட்ட தான் செய்யணும்..... ).
         ஒரு வழியாக எனக்கான முறை வந்தது.   தேர்வாளர் ஒல்லியாக சிடுசிடுவென இருந்தார்.  அவரைபற்றி விசாரித்தபோதே என் தேர்வு முடிவு என்னவாக இருக்கும் என புரிந்தாலும் என் பெயரை அழைத்ததும் உள்ளே சென்றேன் ( சிக்கிடோம் தப்பிக்கவா முடியும்?!!!?....).
          தேர்வாளர் சரியாக 30 நிமிடம் என்னிடம் கேள்விகேட்டார் ( அப்போ நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க .....). 10 கேள்விகள் கேட்டிருப்பார்,  அதில் உன் பாடப்புத்தகத்தில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பதும் காலையில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று விடுவாயா என்ற கேள்வியும் அடக்கம்,  அவரின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலை நான் கூறினேன்.  என்ன தெரியுமா? " மாப் கீஜியே முஜே நஹி மாலும் ".   "சாரி சார், எனக்கு தெரியாது" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா!!).
         ஒருவழியாக என்னை வெளியில் போக அனுமதித்தார் (நான் வெளிய வந்த பிறகு 10 நிமிடத்திற்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படலங்க்றது வேற விஷயம்).   இப்போ உங்க எல்லார் மனதிலும் உள்ள ஒரு கேள்வி நான் வெற்றி பெற்றேனா என்பது தானே?   சரியாக 2  மாதத்திற்கு பிறகு எனக்கு இதே கேள்விக்கு விடை கிடைத்தது.  ஆம் நான் வெற்றி பெற்றேன் ( அந்த தம்பி பாஸ் பண்ணான்னு தான் தெரியல.....).  இரண்டாம் நிலையில் தேர்வு அடைந்தேன்.  நேர்முகதேர்வில் நான் பெற்றது 54  மதிப்பெண்கள் ( பாஸ் மார்க் 50 ).
           நான் தேர்வு எழுதிய அந்த நாள் என்னால் மறக்க முடியாததாகி விட்டது ( அந்த தேர்வாளர பாத்தா கால்ல விழனும்....).

பி.கு
           கடந்த பதிவைபார்த்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....


Saturday 30 July 2011

ரயில் பயணம்

                    இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் transport train தான் அதனால் கடந்தவாரம் சென்னை செல்ல நானும் ரயிலே சிறந்ததென முடிவு செய்தேன்.   அப்பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த பதிவில் எழுதபோகிறேன்.   

 

                     இரவில் பயணம் செய்வதைவிட பகலில் பயணம் செய்வது மிகவும் சுவாரசியமானது.  அதுவும் பொது பயணிகள் பெட்டியில் பயணம் செய்யும்போது நாம் பல அனுபவங்களை பெறலாம்.  சென்னை செல்லும்போது இரவில் பயணம் செய்த நான் திரும்பி வரும்பொழுது பகலில் பயணம் செய்தேன்.  வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சகபயணிகள் அதை தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.  ரயில் புறப்பட்ட சிலநிமிடங்களுக்கு அனைவரும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டும் சிலர் புத்தகத்தை படித்துக்கொண்டும் இருந்தார்கள்.   அடுத்த சில மணிநேரத்தில் எதிரிலிருபவரிடம் சிறிய புன்னகையுடன் நமது நட்பு ஆரம்பமானது.


                    அரசியல், சினிமா போன்றவற்றை விவாதிக்கும்போது சில நண்பர்கள் கிடைத்தார்கள்.  ஒரே ஊர்க்காரர்களையும், எனது கல்லூரி தோழியும் சந்திக்கநேர்ந்தது.  ஒரே ஊரிலிருந்துகொண்டு சந்திக்காத நாங்கள் அந்த பயணத்தில் சந்தித்தது ஆச்சர்யம்.  இதைவிட சுவாரசியம் என்னவென்றால் ஒவ்வொரு ஊர் நிறுத்தம் வரும்பொழுதும் அந்தந்த ஊர் ஸ்பெஷல் திண்பண்டங்கள் கொண்டுவருவார்கள்.   பலா சுளை, முறுக்கு, மல்லிகை பூ, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என  இது ஒரு தனிப்பட்ட சுவாரசியம்.   இப்படி ரயில் பயனதாலேயே அந்தந்த ஊர் ஸ்பெஷல் திண்பண்டங்களை அறிந்து கொள்ளலாம்.
                    இது ஒருபுறம் இருக்க நமது ரயில்வேகாரர்களும் தன்பங்கிற்கு வடை, பஜ்ஜி, கேசரி, போளி என விற்றுக்கொண்டிருந்தார்கள்.  பாவம் குழந்தைகளை வைத்திருந்தவர்கள்தான் போராடிக்கொண்டிருந்தார்கள்.  திண்பண்டம் விற்பவரும் குழந்தைகள் பக்கமாகவே விற்றுக்கொண்டிருந்தார்.  என்ன செய்வது அவரவர் பிரச்சனை அவரவருக்கு.  


                    இப்படி பல சுவாரசியங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ரயில் ஆரல்வாய்மொழி வந்ததும் ஒரு குளிர்ந்த காற்று, அனைவர் முகத்திலும் ஒரு சந்தோசம் " ஆஹா நம்ம ஊர் வந்தாச்சி !!!".  என்னதான் சொல்லுங்க நம்ம ஊர் நம்ம ஊர் தான்.    "சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?" என மனதிற்குள் பாடிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.







                    .  

Wednesday 20 July 2011

முதல் பதிவு

வணக்கம் நண்பர்களே,
                              இது எனது முதல் பதிப்பு எனவே என்னைப்பற்றி எழுதலாம் என நினைத்தேன்.  நான் ஒரு பொழுதுபோக்கு விரும்பி. சினிமா, தொலைக்காட்சி பார்ப்பது எனது பொழுதுபோக்கு.  எனவே எனது வலைப்பூவில் நான் ரசித்த விஷயங்களை பற்றி எழுதலாமென நினைத்துள்ளேன்.
                              தினம் என்னால் எழுத முடியாது எனவே வாரம் ஒரு முறை நான் ரசித்த நிகழ்வுகளை பற்றி எழுதப்போகிறேன்.   என்னால் முடிந்த அளவு சுவாரசியமாக எழுதுகிறேன்.  நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.  இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு வலைபூ என்பதை தெரிவித்துகொள்கிறேன்.   என் வாழ்வில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.